சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் கோழிப்பண்ணையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 8ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புகையில் விபத்தில் சிக்கினார்.
சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக உறுதி செய்தனர்.
எனவே அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதால் சுரேந்தரின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். சுரேந்தரின் பெற்றோரும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
உடனடியாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் அவரது இருதயம், நுரையீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களைஅகற்றினர்.
இதனிடையே உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்து இருந்து காத்திருந்த மற்ற மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சுரேந்தரின் இருதயம் கொண்டு செல்லப்பட்டது.
அவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று அதே மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும்; மற்றொன்று கோவை K.M.C.H மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.
நுரையீரல் மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆறு மணி நேரத்துக்குள் தானம் பெறுபவருக்கு இருதயம் பொருத்தப்பட வேண்டும் என்பதால் சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. உடனடியாக சென்னை-சேலம் இடையே இயக்கப்படும் ட்ருஜெட் விமான நிர்வாகத்திற்கும்; சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் மருத்துவமனையில் இருந்து சேலம் விமான நிலையம் வரை உள்ள 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்தை சீர்செய்தனர்.
புதிதாக கட்டப்பட்ட இரண்டடுக்கு மேம்பாலத்தில் போக்குவரத்தை தடைசெய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்யப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சேலம் வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதே விமானத்தில் சென்னை செல்லவிருந்தார். உடனடியாக அவரும் மற்ற பயணிகளும் விமானத்தில் முன்னதாகவே ஏற்றப்பட்டு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் வந்ததும் உடனடியாக இருதயம் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது.
அரசு மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையிலான பயண நேரம் போலீசாரின் துரிதமான நடவடிக்கைகளாலும்; பொது மக்களின் ஒத்துழைப்பாலும் 40 நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்கள் ஆக குறைந்தது.