இந்து மதத்திற்குரிய சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றி ஒரு பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் நேற்று சென்னையில் நடந்துள்ளது.
தக்க்ஷிண் சித்ராவில் மகிழ்ச்சியும், வியப்பும் கலந்தபடி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, இருவேறு சமூகத்தினரிடையே நடந்துள்ள இத்திருமணம் குறித்து பார்ப்போம்:-
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டர் சுஷ்மா ஹரிணி. தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவர் விக்னேஷ் ராகவன். இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமை இருக்க வேண்டுமென விரும்பினர்.
அவ்வகையில் இருவேறு சமூக பின்னணிகளை கொண்ட அவர்களது உறவினர்களுக்கும் ஏற்றவாறு; இரு சமூக சடங்குகளையும் இணைத்து அவர்களின் திருமணத்தை நடத்திவைக்க ஒரு பெண் புரோகிதரை வைத்தால் என்ன என்பது அவர்களது விருப்பமாக மாறியது.
இதில் வழக்கறிஞரான மணமகள் தனது திருமணத்தில் பெண் புரோகிதரும் மற்றும் பெண் இசைக்கலைஞர்களும் இடம்பெறவேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொண்டதை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் திருமணத்திற்கு மிகக் குறைந்த நாட்களே இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க அவர்கள் முயன்றனர்.
இதற்கிடையில்தான் பெண் புரோகிதர் ‘பிரமரம்ப மகேஸ்வரி’ அவர்களுக்கு கிடைத்தார்.
மணமகளே தனது வருங்கால கணவருடன் சேர்ந்து ஒரு வேத விற்பன்னரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.
மைசூரைச் சேர்ந்த ‘பிரமரம்ப மகேஸ்வரி’ என்பவர் வேத மந்திரங்களை முறையாக பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றவர்.
அவர் திருமண புரோகிதராகவும் செயல்பட்டு இந்த திருமணத்தை நடத்திக் வைக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால் பாரம்பரிய நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்க பெண்கள் இசை குழுவை தான் கண்டுபிடிக்க குடும்பத்தினரால் முடியவில்லை.
இதுகுறித்து மணப்பெண் சுஷ்மாவின் தந்தை சுரேஷ் ரெட்டி (அவரும் ஒரு வழக்கறிஞர்) கூறியதாவது:
”பெண் புரோகிதர் தனது பணியை நன்றாகவே செய்தார். இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளை அவர் சிறப்பாக நிகழ்த்தியது மட்டுமல்லாமல் மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒவ்வொரு மந்திரத்தின் முக்கியத்துவத்தையும் அவர் ஆங்கிலத்தில் விளக்கினார். ஆரம்பத்தில் நாங்கள் தயக்கம் காட்டினோம்.
இது ஒரு கடினமான முறையாக இருந்தது. ஏனெனில் ஒரு திருமணத்தை பெண் புரோகிதர் நடத்தி வைத்ததை இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதில்லை.
ஆனால் இது எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மாறியது.
திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள், புரோகிதர் மகேஸ்வரியின் மந்திரம் ஓதும் திறமையைக் கண்டு பாராட்டினர். அதுமட்டுமின்றி அவரது விவரங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு மணமகளின் தந்தை தெரிவித்தார்.
தனது வித்தியாசமான திருமணம் குறித்து மணமகள் சுஷ்மா கூறுகையில், ”ஒரு பெண் புரோகிதர் சேலத்தில் ஏற்கெனவே திருமணத்தை நடத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடந்தது. எங்களுக்கு நடந்தது வேறுபட்ட இரு சமூகங்களுக்கிடையேயான திருமணம். நமது பாரம்பரியத்தில் மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஓர் ஆண்களின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எனவே, நான் அத்தகைய ஒரு போக்கை மாற்றிக் காட்டமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்பினேன். பெண் புரோகிதர்களும் இருக்கிறார்கள், அவர்களாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்படமுடியும் என்பதை புரிந்துகொள்ள பிரம்மரம்ப மகேஸ்வரி ஒரு நல்ல உதாரணம். திருமணங்களை நடத்த அவர்களை நியமிப்பதன் மூலம் அத்தகையவர்களை நாம் ஊக்குவிக்க முடியும் ” என்றார்.