டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை ஏற்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதத் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 6 மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1.தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்த பின், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
2.தேர்வு நடவடிக்கைகள் முழுவதுமாக நிறைவு பெற்ற உடன், தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை இணையதளம் வழியே உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இம்முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கும்.
3.கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை வாரியாக, மாவட்ட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
4.தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது, 3 மாவட்டங்களை மட்டுமே தங்களுடைய தேர்வு மைய விருப்பமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். தேர்வர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் தேர்வு மையத்தை தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.
5.டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம். தேர்வு எழுத வரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு உண்மையைச் சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
6.தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனும் இருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து, முழுவதும் தடுக்கும் வண்ணம் உயர் தொழில்நுட்பத் தீர்வுகள் நடைமுறைபடுத்தப்படும்.