சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து தேர்வுமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள முடிவெடுத்தது TNPSC.
அதன்படி, கடந்த 7-ம் தேதி தேர்வு முறையில் மாற்றங்கள் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று குரூப்4 மற்றும் குரூப்2A தேர்வுமுறைகளில் மேலும் 6 முக்கிய சீர்திருத்தங்களை செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1) அதன்படி இனி வரவிருக்கும் குரூப் 4 மற்றும் குரூப் 2A இரு தேர்வுகளுக்கும் முதல்நிலை தேர்வு (Prelims) மற்றும் முதன்மை தேர்வு (Main exam) நடைபெறும்.
இதற்கு முன் குரூப் 1 மற்றும் குரூப் 2 என்ற இரு தேர்வுகளுக்கும் மட்டுமே இந்த இரண்டு கட்ட தேர்வுமுறை இருந்தது.
2) இனி தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே 10 மணிக்கு தேர்வு என்றால் தேர்வு கூடத்திற்கு 9 மணிக்கே வரவேண்டும்.
ஏனெனில் தேர்வர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.
காலை, மாலை தேர்வு என்றால் மதிய தேர்வு 3 மணிக்கு நடைபெறும்.
3) இனி அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது கட்டாயம். ஒருவேளை தேர்வருக்கு கேள்விக்கான விடை தெரியவில்லை என்றால் கூடுதலாக தரப்பட உள்ள E கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இனி A,B,C,D கட்டங்களோடு E என்ற கட்டமும் சேர்க்கப்படும். E கட்டத்தில் குறிக்க தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். எத்தனை கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்பதை அந்த விடைத்தாளில் சரியாக குறிப்பிட வேண்டும்.
4) இனி விடைத்தாளில் தேர்வர்களின் கையொப்பத்திற்கு பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும். பின்னாளில் சம்பந்தப்பட்ட தேர்வரின் மீது ஏதேனும் முறைகேடு குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், இதை கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
5) TNPSC விடைத்தாட்களை எடுத்து வரும் வாகனங்களில் GPS மற்றும் CCTV பொருத்தப்பட்டு அனைத்தையும் தேர்வாணைய அலுவலகங்களில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டறை ஏற்படுத்தப்படுகிறது.
6) தேர்வுகள் TNPSCயிடம் தங்களது கோரிக்கைகளை மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்படுகிறது.