தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்திரன் உள்ளிட்ட தேவர்களை வணங்கி கொண்டாடும் நாள் போகிப் பண்டிகை என்பதால் பொதுமக்கள் அதிகாலையிலேயே தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி வண்ண கோலமிட்டு போகிப் பண்டிகையை வரவேற்றனர்.
பனிக்காலத்தின் நிறைவு நாளான இன்று நம் சுற்றுப்புறத்தில் உள்ள விஷக்கிருமிகளை அழிப்பதற்காக பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
இதனை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்தும், இதனால் மற்ற பொதுமக்கள் அதிகளவில் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதாகவும் அதனால் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ‘புகையில்லா போகி பண்டிகை’ கொண்டாட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.
ஆனாலும் சென்னை உட்பட பல நகரங்களில் பொதுமக்கள் வழக்கம் போல பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். இதனால் எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது.