சென்னை:
மனைவி தோசை சுட்டு தராத காரணத்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 66 வயதான ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம், வழக்கம்போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
தன்னிடம் பணமில்லை என மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் தான் தரவில்லை சாப்பிடுவதற்கு தோசையாவது ஊற்றி கொடு என மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது .வீட்டில் இருந்தால் கணவனின் தொல்லையை பொறுக்க முடியாது எனக்கருதிய மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.
குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுக்கிறார், சாப்பிட தோசையும் சுட்டுத்தர மறுக்கிறார் என கோபத்தின் உச்சிக்கே போன ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ரவிச்சந்திரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோசைக்காக உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு வெந்து நொந்து போன இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.