திருச்சி அருகே திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தா படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் நித்தியானந்தாவை கர்நாடகா போலீஸ் தேடி வருவதும், அவர் தனக்கு கைலாச தீவில் ஜாலியாக வலம் வருவதும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனாலும் தினம் தினம் நித்யானந்தா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருச்சி அருகே லால்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நித்யானந்தா புகைப்படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமணத்திற்கு வந்த உறவினர்களும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களும் இந்த பேனரை கண்டு ஆச்சரியமடைந்தனர். நித்யானந்தா படத்துடன் பேனர் வைக்கப்பட்டது ஏன்? என்பதை விளக்கிய மணமகனின் நண்பர்கள், திருமணத்திற்கு வரும் உறவினர்களை வித்தியாசமாக கவர வேண்டும் என நினைத்தோம். அதனால் இணையதளங்களில் யார் அதிக ட்ரெண்டிங்கில் உள்ளனர் என்று தேடிப் பார்த்தபோது நித்தியானந்தா தான் பதிலாக கிடைத்தார் எனவும் தெரிவித்தனர்.
மேலும் அவருடைய கைலாச நாடு எங்கிருக்கிறது என்பது தெரிந்தால் நாங்களும் அங்கு செல்வோம் என்று கூறியபடியே, நித்யானந்தா அடிக்கடி உபயோகப்படுத்தும் நோ சூடு.. நோ சொரணை என்ற வசனத்தையும் இவர்கள் அடிக்கடி தெரிவிக்கின்றனர்.