சென்னை:-
தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வாக்கி டாக்கிகள் வாங்க மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த முடிவில் 14 காவல்துறை அதிகாரிகள் மீதும், 2 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பே 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை எழுப்பி அப்போதைய டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி.
2017-18 ம் ஆண்டில் காவல்துறையை நவீனமயமாக்க 47 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் காவல்துறைக்கு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
ஆனால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக 4000 வாக்கி டாக்கிகளை கொள்முதல் செய்ய 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் வாக்கி டாக்கிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளின் வீடுகளில் இந்த ரெய்டு நடைபெற்றது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி. அன்புச்செழியனின் வீடு, பட்டினப்பாக்கம் MRC நகரில் உள்ள ஏ.டி.எஸ்.பி.கள் உதயசங்கர் மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகள் மற்றும் பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பிலும் சோதனை நடைபெற்றது. R.A.புரம், அடையாறு, பறங்கி மலை உள்ளிட்ட மொத்தம் 18 இடங்களில் நேற்று காலை முதல் 10 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலிசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-
காவல்துறை அதிகாரிகள் 14 பேர் மீதும், 2 தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றிப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.