சென்னை:-
ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடி குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆக்ஸிஸ் வங்கி துணையுடன் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
அந்த குறும்பட வெளியீட்டு விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்த இந்த விழாவில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறும்படத்தின் சி.டி.யை வெளியிட்டார்.
‘வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தில் போலீஸ் அதிகாரிகள் அன்பு, செந்தில்குமார், ரேவதி, குணசேகரன், வினோத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விழாவில் பேசிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்,
ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடியில் விவரம் தெரிந்தவர்கள் கூட பாதிக்கப்படும் நிலை உள்ளது. சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் 80 சதவீத புகார்கள் இது தொடர்பாகத்தான் வருகிறது.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து செயல்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் நடக்கும் இந்த மோசடி குற்றங்களை தடுப்பது கடினமாக உள்ளது. இதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை ஆய்ந்து தேடி வருகிறோம் என அவர் பேசினார்.
பொதுமக்களிடம், மோசடிக்காரர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கு விவரம், கிரெடிட் கார்டு, ATM கார்டு போன்றவற்றின் ரகசிய குறியீட்டு எண்(cvv) மற்றும் மொபைல் OTPக்கள் போன்றவற்றை கேட்டால் அதுபற்றி எதுவும் சொல்லக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ‘வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற தலைப்பில் இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.