தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் இத்திட்டத்தை கடந்த நவம்பர் 29ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் வரும் ஜனவரி 12ம் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரூபாய் ஆயிரம் பணத்தை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 2,363 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஸ்மார்ட் ரேஷன் கார்டு அவசியம் என்றும், அது இல்லாதவர்கள் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து செல்போன் எண்ணிற்கு வரும் கடவுச்சொல் அடிப்படையில் இதனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்தும் பெறப்பட உள்ளது.இதில் சர்க்கரை ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே உண்டு. பணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.