இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 21 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிவகங்கை இளையான்குடியை அடுத்த புதுக்குளத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அனுமதியின்றி மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நபர்கள் ரகசியமாக தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதபோதகர்கள் கடந்த மாதம் டெல்லி வந்துள்ளனர். அங்கிருந்து ரயில் மூலமாக கடந்த பிப்ரவரியில் திண்டுக்கல் வந்து, ஒரு மாதம் தங்கியுள்ளனர். மதப் பிரசாரத்துக்காக அங்கிருந்து ராமநாதபுரம் சென்றுள்ளனர். பின்னர் இளையான்குடி பள்ளிவாசலுக்கு ஜாமாத்தார்கள் மூலம் மார்ச் 21-ம் தேதி வந்து ரகசியமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த தகவல் போலீஸாருக்குத் கிடைத்தது. இதையடுத்து பண்ணை வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஏஜென்ட்டுகள் 2 பேர் என மொத்தம் 13 பேரையும் அழைத்துச்சென்ற போலீசார் அவர்களை தனிமைப்படுத்தித் தங்க வைத்துள்ளனர்.