சென்னை:-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து நிபுணர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். கொரோனா பரவும் சூழலில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாக எடுக்கும் முடிவை ஒட்டி தமிழகத்தில் பிளஸ் 2 நடத்துவது குறித்து அறிவிப்பதாக அரசு தெரிவித்திருந்தது.
சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா, வேண்டாமா என, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கல்வியாளர்கள் , மருத்துவ வல்லுனர்கள் உடன் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில், மாணவ – மாணவிகளிடையே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
மாணவர்களின் பாதுகாப்பு , உடல்நலன் முக்கியம் என, முதல்வர் கூறியுள்ளார். பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.