அங்கன்வாடி பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு அரசின் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை கிடைக்கிறது.
இந்நிலையில், அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளதுடன் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்கள் தனது கடிதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்களில், ஆதரவற்ற விதவைகள், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.