நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியின் கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி விஸ்வ ரஞ்சன், அன்பழகன், சுதிஷ் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் சேக் அபுபக்கர், சஞ்சய், இசக்கி பிரகாஸ், அப்துல்லா ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். பள்ளியில் ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.