சென்னை
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது.
கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குச்சீட்டு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் இன்றுதான் முழு முடிவுகள் முழுமையாக தெரியவரும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 108 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 724 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 132 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.