சென்னை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்,அக்டோபர் 6 மற்றும், 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை, 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.
இச்சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கவர்னரை சந்தித்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என அ தி மு க சார்பில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
அப்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என புகார் அளித்துள்ளோம் என்றும் தேர்தல் தொடர்பாக புகார்கள் அளித்தும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவித்தோம் என கூறினார்.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விதிமுறைகளை மீறி அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்களது வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால் திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிபடுத்தவும் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் என்ப அது குறிப்பிடத்தக்கது.