இன்று ஆடி பிறப்பு. 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது திருமலை திருப்பதி.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், திருமலை திருப்பதி கோயிலுக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. அதில் ஒன்று ஆடி மாத பிறப்பான இன்றைய நாளுடன் தொடர்புடையது.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஆடி மாதம் முதல் தேதியன்று மங்கலப் பொருட்களுடன் வஸ்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு மரியாதை செய்யப்படும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் உள்ள தொடர்பு என்ன, இதன் பின்னால் உள்ள கதை என்ன, காணலாம்.
முகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது சுமார் 40 ஆண்டுகள் திருப்பதியில் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவ மூர்த்தி பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ஆடி மாத பிறப்பன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து வஸ்திரங்கள் அனுப்பும் பாரம்பரியம் தொடர்கிறது.
ஆடி மாத பிறப்புக்கும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதிக்கும் மற்றுமொரு சுவாரசியமான தொடர்பு உள்ளது.
அதாவது, திருப்பதி பெருமாள் தன்னுடைய திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கினார் என்பது ஐதீகம். தான் கொடுத்த கடனை திருப்பி செலுத்துமாறு குபேரன் பெருமாளிடம் ஆடி மாதம் முதல் நாளில் கேட்பார் என்று சொல்லப்படுகிறது.
எனவே ஆடி முதல் நாளில் பக்தர்கள் தமது வீடுகளில் 11 ரூபாய் எடுத்து வைப்பார்கள். தனக்காக பணம் எடுத்து வைக்கும் பக்தனின் பக்தியில் நெகிழும் பெருமாள், அவர்களின் மனக்குறைகளை நீக்கி நல்வாழ்வு வாழவைப்பார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.