தமிழகத்தில், கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களை அழைத்து வர தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஸ்ரா, அனைத்து ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த ஆர்.டி.ஓ-க்களின் எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும், கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒரு வாரமாக தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
பள்ளி வாகனங்களின், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி திறப்பு, முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் உள்ளிட்டவை உள்ளனவா; முறையாக பராமரிப்பில் உள்ளதா; அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர், உதவியாளர் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் குறைபாடு உள்ள வாகனங்கள், மறு ஆய்வுக்கு அழைக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது,
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பல பள்ளிகளின் வாகனங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால், 15 சதவீத பஸ்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்பதால், மற்ற பஸ்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். ஆய்வு செய்யாத பஸ்கள் இயக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
அதே சமயம் மேலும் பள்ளிகளுக்கு செல்ல பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அவசியமானது. யாரையும் வற்புறுத்த கூடாது. அதேநேரம் ஆன்லைன் மூலமாக கற்பித்தல் விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது