சென்னை:-
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ கேம்-ஆன பப்ஜி செயலியையும் தடை செய்வது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க.நகரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கபசுர குடிநீர், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கிய அவர், இலவச இ-பாஸ் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நடமாடும் காய்ச்சல் முகாம் மூலம் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் PUBG விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. PUBG வீரர்களின் வேலைகளைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியாக பப்ஜியை விளையாடுவது வீரர்களின் வேலை திறனைப் பாதிக்கிறது. மேலும், அதனால் சக வீரர்களுடன் பழகுவது குறைந்து விடுவது மட்டுமன்றி தூக்கமின்மையையும் ஏற்படுத்தி விடுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயர் அதிகாரிகள் வீரர்கள் பப்ஜி விளையாடுவதைத் தடுக்க வீரர்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.