சென்னை:
தமிழகத்தையே அதிர வைத்த TNPSC தேர்வு முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது 26 பேரை CBCID போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 40 பேரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 2019-ம் ஆண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக ஒரு சில தேர்வு மையங்களை தேர்வு செய்து, பலரும் முறைகேடாக பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.
இப்படி முறைகேடு செய்து சிலர் வெற்றிபெற்றது உண்மை தான் என TNPSC அவர்கள் மீது புகார் அளித்தது. இந்த புகாரை ஏற்று CBCID போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி,TNPSC ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன். இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்வில் வென்றவர்கள் உட்பட 32 பேரை கடந்த பிப்ரவரி மாதத்தில் CBCID போலீசார் கைது செய்தனர்.
TNPSC வழக்கில் கைது செய்யப்பட்ட TNPSC ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் பல முறை விசாரணை நடத்தினர். இதில் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி, ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி மிகப்பெரிய மோசடி நடத்தி 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.விசாரணைக்கு பின்னர் TNPSC முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக அரசின் உள்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி உட்பட 20 பேரை CBCID போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் முறைகேட்டில் தொடர்புடைய 3 VAO-க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை CBCID போலீசார் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், TNPSC முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை CBCID போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முறைகேடுகள் தொடர்பாக மேலும் 40 பேரை CBCID காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.TNPSC முறைகேடு வழக்கில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் என பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் மீண்டும் TNPSC முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள், உதவியர்கள் என பலரும் தற்போது பதற்றத்துடன் உள்ளனர்.