ஆண்டிப்பட்டி:
பூமிக்கு அடியில் இறங்கி பூஜை நடத்த சென்ற அகோரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன்-ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் காசி சென்று அங்குள்ள சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த அவர் ஊரிலுள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டியுள்ளார். அதில் சிவனுடைய படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை போட்டு தன்னையும் உள்ளே வைத்து மேலே சிமெண்ட் போட்டு பூசி மூடி விடும்படி கூறியிருக்கிறார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அசோக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதற்கு அவர், “நான் 25 வருடங்களாக சாப்பாடு மற்றும் நீர் அருந்தாமல் புகை மட்டுமே பிடித்து உயிர் வாழ்கிறேன். மேலும் நோய்களிடமிருந்து பாதுகாக்கத்தான் நான் பூமி பூஜையில் இறங்கி உள்ளேன். தற்பொழுது பூமிக்கு அடியில் இறங்கி பூஜையில் ஈடுபட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்கு முதல்நாள் வெளியே வருவேன்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஊர் மக்கள் இந்த இடத்தில் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.