தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைசர் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, கொரோனாதொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஒரே முறையில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இறுதி தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்தப்படும் எனத் தெரிவித்தார். பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்றும், முறைகேடுகள் நடக்காத வகையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.