‘சத்ரியன்’ திரைப்படத்தை தனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என புகைப்படம் ஒன்றை விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துபாயில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அதில், ”நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தனைடையே விஜயகாந்துக்கு சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.