சென்னை:
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையெதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனுக்கள் தாக்கல் செய்தனர். பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப குழு தாக்கல் செய்த பதில் மனுக்களில், அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என கூறப்பட்டது.
தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன் தரப்பில் முறையிடப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் தமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.