கோயம்பத்தூர்
கோயம்பத்தூர் மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஊராட்சியில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் கடந்த இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.
குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த அருள்ராஜ், அ.தி.மு.கவை சேர்ந்த வைத்தியலிங்கம், பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அ.தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
பா.ஜ.கவிலிருந்து போட்டியிட்ட கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. கார்த்திக் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.
இதில் வித்தியாசமான தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களாக ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட கார்த்திக்கிற்கு வாக்களிக்கவில்லை என்பதுதான்.
மேலும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே கார்த்திக்கிற்கு வாக்களிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.