தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் இது வெறும் புரளி என்று தெரியவந்ததையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பதும்,
இவரின் தந்தை ஜெபஸ்டியான் கடந்த 23ஆம் தேதி இடப்பிரச்சினை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்ததாகவும், அந்த மனு மீதான உரிய விசாரணை மேற்கொள்ளாத காவல்துறையின் மீதான விரக்தியினால் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.