சென்னை:-
டிவி சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், வரும் டிசம்பர் 1 முதல் கேபிள், ‘டிவி’ கேபிள் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விரும்பிய சேனல்களுக்கும் மாறும் முறை 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் ஆனது. புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள், தங்களின் சேனல்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை, 19 ரூபாய் வரை நிர்ணயித்து கொள்ள முடியும்.
இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணம், ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட கட்டணத்திற்கு சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதனால், குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு, தனி கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளன. உதாரணமாக, ‘டிஸ்னி ஹாட் ஸ்டாரில்’ தொகுப்பு சேனல்கள்களின் கட்டணம், 49 ரூபாயாக உள்ளது. இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன.
இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு கேபிள் மாதக் கட்டணமாக, 130 ரூபாய் ஜி.எஸ்.டி. உடன் 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.