இரவு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தொற்று எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பேருந்து போக்குவரத்தை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் கால அட்டவணை பேருந்துகள் குறிப்பிட்ட இடத்திற்கு இரவு 10 மணிக்குள் சென்று சேரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி,ஓசூர்,சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் 2 மணிக்கு உள்ளாகவும், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், நெய்வேலி, ஆகிய மாவட்டங்களுக்கு இறுதிப் பேருந்து 4 மணிக்கும் புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், வேலூர் திருப்பத்தூர், புதுச்சேரி திருவண்ணாமலை, ஆரணி, ஆகிய மாவட்டங்களுக்கு இறுதிப் பேருந்து 5 மணிக்கும், காஞ்சிபுரம் ,செய்யாறு ஆற்காடு,ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 6 மணிக்கு இறுதிப் பேருந்து புறப்படும் ஏன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூர மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.