சென்னை:
வங்கக் கடலில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கி விடிய விடிய பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வாகனத்தை இயக்க இயலாமல் உருட்டிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி மேலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.