புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்தில் ஈடுபட தடை உள்ளிட்ட பல்வேறு சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிமுதல் நள்ளிரவு 1 வரை விடுதிகள் இயங்கலாம். நீச்சல் குளத்தின் மீது எந்தவிதமான கொண்டாட்டங்களிலோ அல்லது கேளிக்கை விருந்துகளில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று விடுதிகளுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் வரக்கூடிய நபர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மதுவிருந்து கொண்டாட்டங்களில் அனுமதிக்க கூடாது. பெண் விருந்தினர்கள் வந்தால் அவர்களை பெண்களை பௌன்சர்களை வைத்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் இருந்தால் அவர்களை விடுதியின் நிர்வாகம் ஓட்டுனர்களை வைத்து காரில் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டும். மதுபோதையில் கூட்டமாகவோ அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு பிரச்சினைகள் ஈடுபட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நட்சத்திர விடுதிகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தும் விடுதி நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டு புத்தாண்டை மக்கள் சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.