கொரோனா காலக்கட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர ஹோட்டலில் டாக்டர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அரசு பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய அரசு டாக்டர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்
மருத்துவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட, சுகாதாரத்துறை சார்பில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அப்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வரும் வெற்றிசெல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகிய இருவரும் தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர்.
அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கி வந்தனர். விடுதியில் தங்கி இருந்த போது மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் இன்னொரு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் இரு பெண் மருத்துவர்களும் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த விசாகா கமிட்டி தீவிர விசாரணை நடத்தியது.
புகார் கொடுத்த 2 பெண் மருத்துவர்களிடமும், குற்றச்சாட்டுக்குள்ளான அரசு மருத்துவர்கள் வெற்றிச் செல்வன், மோகன் ராஜ் ஆகியோரிடமும் தனித்தனியாக நடத்திய விசாரணையில் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மை என தெரியவந்தது.
இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன், தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரணிடம் அளித்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு அரசு மருத்துவர் வெற்றிசெல்வன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், மருத்துவர் மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் வழக்குகளை பதிவு செய்த தேனாம்பேட்டை மகளிர் போலீசார் இரு மருத்துவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெற்றிசெல்வன் மற்றும் மோகன்ராஜை போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.