ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் சமூக பரவலாக மாறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புத்தாண்டு அன்று கொண்டாட்டம் என்று மக்கள் ஒன்றுகூடுவதை தவிரக்க வேண்டும் என்றும், மெரினா, எலியாட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
ரிச்சர்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக் ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும்,
ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் DJ இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலையில் 31ஆம் தேதி இரவு வாகனங்கள் செல்ல தடை. அதாவது அன்று இரவு மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்லத் தடை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இவை தவிர காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டிய சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் 31ஆம் தேதி இரவு சாலைகளில் பைக் ரேஸ் என்ற அதிவேகமாக சாலையில் இரு சக்கர வாகனங்களை இயக்கினால் காவல்துறை சார்பில் பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 31ஆம் தேதி இரவு 11 மணி வரை உணவு விடுதிகள் சென்னையில் செயல்பட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.