சென்னை:-
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளானர்.
முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அவர்கள் ஆஜராகினர். இதில் சிவசங்கருக்கு பதிலாக அவர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே, நெஞ்சுவலி காரணமாக கடந்த 9ம் தேதியே டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர் எனவும் கூறப்பட்டது.
சிவசங்கர் பாபா மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் பணியில் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.