சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை திடீரென இரவு நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை வெள்ளக்காடானது. பிரதான சாலைகள், தெருக்கள் என அனைத்தும் சேதமானது. சென்னையில் பழுதான சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை முன்னிட்டு சென்னையின் பிரதான சாலைகளை சீரமைக்கும் பணி இரவில் நடைபெற்று வருகிறது. எங்கும் எப்போதும் அதிரடி ஆய்வுகளை நடத்தி வரும் முதலமைச்சர் இதிலும் தனது அதிரடியை காட்டியுள்ளார்.
மந்தைவெளி பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இரவு 10.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார். அப்போது உடன் இருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, முதல்வருக்கு சாலை சீரமைப்பு பணிகள் குறித்து விளக்கினார். மேலும் அதிகாரிகளும் சாலையின் அளவு மற்றும் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.