சென்னை
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாகதமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக, கல்வி துறை சார்பில், செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுப்பார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
- சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்
- எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக பணியாற்றுவோரைத் தேர்வு செய்தல் கூடாது
- விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம்
- பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்
- கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும்.
- குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்
- இணையதளங்களில் பதிவு செய்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பள்ளிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய / மாவட்ட அளவிலான குழுக்கள் சரிபார்த்தல் அவசியம்.
- தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
தன்னார்வலர்களைத் தேர்வு செய்யம் போது மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.