பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த கிரா (98) உடல்நல குறைவால் இயற்கை எய்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கி.ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கரிசல் குயில் கி.ரா.அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்.கி.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும். கி.ரா.அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.