மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது.
டெல்லியில் விவசாயிகள் போராட தொடங்கி இன்றுடன் 6 மாதம் நிறைவடைந்த நிலையில், இதனை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டுவந்த ‘விலை உறுதி மற்றும் பண்ணை சேவைச் சட்டம் 2020’, ‘வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020’, ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020’ ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் (26/05/2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இதில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும், விவசாயிகள் நலனுக்காக அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.