திருச்சி மாவட்டம் முசிறி பெரியார் நகரில் பகுதியில் வசித்து வருபவர் சிங்காரவேலன் (51). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் விதவைப் பெண் ஒருவர் கடந்த 24. 3. 2021 அன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் பெரியார் நகரில் வசித்து வரும் சமையல் மாஸ்டர் சிங்காரவேலன் தனது வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விதவைப் பெண்ணின் 7 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தியுள்ளார். எனவே சிங்காரவேலன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் சிங்காரவேலன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் சிங்காரவேலனின் மகன்கள் இருவர் காவல்துறையில் போலீசாக வேலை பார்ப்பதால் சிங்காரவேலனை சிறுமி பாலியல் சீண்டல் வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து திருச்சி எஸ்பி மயில்வாகனனிடம் புகார் சென்றது. இதையடுத்து திருச்சி எஸ் பி தனிப்படை போலீசாருக்கு சமையல் மாஸ்டர் சிங்காரவேலனை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் முசிறி குளித்தலை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சிங்காரவேலனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சிங்காரவேலன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை முசிறி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் முசிறி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் முசிறியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.