சென்னை:-
கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அதேபோல சில பகுதிகளில் டாஸ்மாக்கை கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது.
சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிப்பதற்காக தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பனை செய்த திரெளபதி பட நடிகர் ரிஸ்வான் (30) என்பவரை போலிசார் கைது செய்தனர்.
அவரது வீட்டிலிருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்ஷன் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரதீப் (31) மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தேவராஜ்-ன் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், 20,000 பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சினிமாவில் துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு டோர் டெலிவரியும் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர் தேவராஜ் யாரிடம் இருந்து மதுபானம் வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.