பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதனையடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக நாளை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று புதுக்கோட்டை மாவட்டம், முள்ளுக்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 2 மாணவிகளுக்கும், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதேபோல, ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசுப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும், திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று காலை கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து, அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதால் பல பள்ளிகளில் தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.