இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அதனையடுத்து கொரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். அதனையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மது அருந்த கூடாது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்ததது. இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தி கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இதுகுறித்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் மது அருந்த கூடாது என புறப்படும் செய்திகள் தவறானவை என கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி முதல் முறை செலுத்தி கொண்டவர்கள் கட்டாயம் இரண்டாவது முறையும் செலுத்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.