சென்னை:-
திமுக வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போதைய திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான பலராமன் (77) கொரோனாவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதியிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில் மற்றொரு உயிரிழப்பு கட்சியினருக்கு இடையை பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:-
வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால், இன்று காலை மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ – அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர், போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர், 13-வது மெயின் ரொடு, சாந்தி காலனியை சேர்ந்தவர் பலராமன். இவர், சுமார் 25 ஆண்டுகளாக வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ளார்.
எம்.எல்.ஏ-வோ எம்.பி-யாகவோ இல்லாத போதும் அவர் திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர். 1991-ம் ஆண்டு தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வெற்றி பெற பணியாற்றியவர்களில் முக்கியமானவர். மேலும், திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது தி.மு.க. பிளவை சந்தித்தது. அப்போது வடசென்னையில் திமுகவை கட்டிக் காத்தவர்களில் முக்கியமானவர் பலராமன் என்பது குறிப்பிடத்தக்கது.