வங்கக்கடலில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரையிலும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது.