சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு சேர நேர்க் கோட்டில் வரும் நிகழ்வே கிரகணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி டிசம்பர் 26 ஆம் தேதியன்று வளைய சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இதுபோன்று மற்றொரு வளைய சூரிய கிரகணத்தை காண 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
சூரியன், நிலா, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரியன் வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப்பகுதியில் நிலவு மறைத்தால் அது வளைவு சூரிய கிரகணம். டிசம்பர் 26 ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை அனைவரும் சூரிய கண்ணாடியுடன் பாதுகாப்பாக பார்க்கலாம். சூரிய கண்ணாடி ரூ.10 முதல் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். 26-ந் தேதி காலை 8.06 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.14 மணிக்கு முடிகிறது. 9.31 முதல் 9.34 வரை வளைய சூரிய கிரகணம் 3 நிமிடங்கள் நீடிக்க இருக்கிறது.