இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
பொதுமக்கள், பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதனால் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு இன்றுமுதல் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக அக்டோபர் 21 ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) மக்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அக்டோர் 21 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
மேலும் தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுவது வழக்கம் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள், ரயில் கால அட்டவணையின்படி திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள பயணிகளை தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.