சென்னை:-
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்தமான் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (13ம் தேதி) உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையம், நவ.14ம் தேதி நெல்லை, குமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.