கொரோனா 3வது அலை பரவல் காரணமாக மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தடை கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளின் முன்பு பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததை அடுத்து, இன்று வழக்கம் போல் பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே காவடி சுமந்த படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ராமேஸ்வரத்திலும் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.