இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் முறையில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்க கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் இக்கோயிலில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில், கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்க இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் இந்தக் கருவி கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் .