சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் , சானிடைசர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். அங்கு வந்த சிறுவர்கள் சிலருக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு செய்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,இரவு நேர ஊரடங்கு நோய் பரவுதலை குறைக்க பயன்படுத்தப்படும் உத்தியாக பார்க்கப்படுகிறது. தற்போது ஒரே நேரத்தில் அதிகப்படியான நோயாளிகளை நம்மால் சமாளிக்க முடியாது. ஆனால் இரவு நேர ஊரடங்கு ஆனது மூன்று வாரங்களுக்கு மேல் ஒரு இடைவெளியை நமக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. கொரோனா தாக்கத்தின் முதல் அலையின் போது ஏற்பட்ட பொது முடக்கம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஆகவே முழு முடக்கம் என்பது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். நோய் பரவுவதற்கான காரணிகளை குறைப்பதன் மூலம் உடனடியாக பரவாமல் தடுக்கப்படுகிறது. இதனால் சூழ்நிலையை நமது கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என்றும் கூறினார்.அரசு சார்பில், மருத்துவமனைகளில் போதுமான இருக்கைகள்,தேவையான மருந்துகள் எளிதாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.