முழு ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16க்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, கொரோனாவைக் கருத்தில் கொண்டு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. வீரர்களோ அல்லது காளைகளோ, ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி, ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே பங்கேற்க முடியும், மாடுபிடி வீரர்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது.
மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான ஜனவரி 16ம் தேதி அன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் படி முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு அலங்காநல்லூரில் ஜனவரி 16ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.